திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பதற்காக முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கோருதல் - TISL

திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பதற்காக முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கோருதல் தொடர்பில் ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நேஷனல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
● "எமது திருடப்பட்ட பணத்தை திருப்பித் தரவும்" என்பது அரகலய - ஆர்ப்பாட்டத்தின் முக்கிய முழக்கமாக இருந்தது.
● TISL நிறுவனமானது குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமான சட்டத்தின் (POCA) கொள்கை மற்றும் சட்ட கட்டமைப்பை உருவாக்குவதற்காக 2019 இல் நிறுவப்பட்ட அரச சொத்துக்களை மீட்பதற்கான சிறப்பு ஜனாதிபதி செயலணியின் (START) உறுப்பினராக இருந்தது.
● 2023 இல் நிறுவப்பட்ட புதிய குழுவால், POCA உருவாக்கத்தில் பொதுமக்கள் மற்றும் சிவில் சமூகத்தின் ஆலோசனையை பிரக்ஞையுடனே புறக்கணித்துள்ளது.
● TISL நிறுவனமானது POCA தொடர்பான வரைவு மசோதா தொடர்பான மாற்றுக் கருத்துகள் மற்றும் மதிப்பாய்வுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களை அழைக்கிறது, இதை நீதி அமைச்சகம், சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் இணையதளத்தில் பொதுமக்களின் கருத்துக்களுக்காகக் காணலாம்.
● சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை அரசாங்கத்துடனான ஒப்பந்தங்கள் தொடர்பான எந்தவொரு புதிய சட்டமும் முறையான நடைமுறைகளுக்கு உட்பட்டு ஜனநாயக மற்றும் ஆலோசனை செயல்முறையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்க வேண்டும்.
இலங்கை நீண்ட காலமாக பாரிய ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டவிரோதமாகப் பெற்ற செல்வத்தை நாட்டின் நலனுக்காக திரும்பப் பெறுவதற்கான பிரஜைகளின் குரல் இப்போது வலுப்பெற்றுள்ளது.
குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமான சட்டம் (POCA) ஐ நடைமுறைப்படுத்துவதன் நோக்கமானது, வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களைக் கண்டறிதல், பறிமுதல் செய்தல், மீட்பது மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கான சட்டக் கட்டமைப்பை வழங்குவதாகும். ஊழல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணவும், அபகரிக்கப்பட்ட சொத்துக்களை அவற்றின் உண்மையான உரிமையாளர்களான இலங்கை மக்களுக்கு மீட்டமைக்கப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்கவும் இச்சட்டக் கட்டமைப்பு உதவும்.
குறிப்பிடப்பட்ட நோக்கத்திற்காக இலங்கையில் தற்போதைய சட்டங்களின் போதாமை காரணமாக, புதிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) அண்மையில் வெளியிடப்பட்ட கட்டமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, மற்றும் ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் சமவாயத்தால் (UNCAC) குறிப்பிடப்பட்டுள்ள தரநிலைகளுக்கு இணங்க, மார்ச் 2024 க்குள் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பதற்கான சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும்.
இதன்படி, நீதி அமைச்சு கடந்த மாதம் ஏப்ரல், 10ம் திகதி குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமானம் மீதான கொள்கை, சட்ட கட்டமைப்பு மற்றும் முன்மொழியப்பட்ட சட்டத்தின் வரைவை உருவாக்குவதற்கான குழுவின் அறிக்கை'யை அதன் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட தலைமையில் 17 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை பதினொரு பகுதிகளைக் கொண்ட ஒரு வரைவு மசோதாவை உள்ளடக்கியது; "பொது விதிகள் மற்றும் குற்றங்கள்; குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமானம் தொடர்பான விசாரணைகள், தடுப்பு மற்றும் பறிமுதல்; குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமானத்தை நீதித்துறை முடக்குதல்; குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமானத்தைப் பாதுகாத்தல், பேணிப் பராமரித்தல் மற்றும் நிர்வகித்தல்; பறிமுதல் நடவடிக்கைகள்; குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவில் தீர்வு; குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமானம்; குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமானத்தை அப்புறப்படுத்துதல் மற்றும் அதன் பெறுமதியைப் பயன்படுத்துதல்; குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமானம் தொடர்பான பாதிக்கப்பட்டோருக்கான நம்பிக்கை நிதியம்; சர்வதேச ஒத்துழைப்பு; மற்றும் இதர ஏற்பாடுகள்" ஆகியவை அடங்கும்.
POCA போன்ற முக்கிய ஊழல் எதிர்ப்புச் சட்டங்களை இயற்றுவதில் பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக ஆலோசனைகளை இலங்கை அரசாங்கம் அப்பட்டமாகப் புறக்கணித்துள்ளதை நிரூபிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கை எந்தவொரு பொது ஆலோசனையும் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது என்று ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) கவலை கொண்டுள்ளது.
திருடப்பட்ட சொத்தை மீட்டெடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் POCA சட்டம் முக்கியமானது, மேலும் இது ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் அதன் செயல்திறனை உறுதி செய்வதற்கும் பொதுமக்கள், சிவில் சமூகம் மற்றும் உள்நாட்டு நிபுணர்கள் போன்ற பல பங்குதாரர்களின் தீவிர ஈடுபாட்டை நம்பியுள்ளது. எவ்வாறாயினும், தொழில்நுட்ப ஆதரவை வழங்கிய சர்வதேச நாணய நிதியம், முறையான, வெளிப்படையான மற்றும் ஆலோசனை செயல்முறையைப் பின்பற்றாமல் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த முக்கியமான தேவைக்குப் பதிலளிக்கும் விதமாக, ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது POCA தொடர்பாக முன்மொழியப்பட்ட சட்டத்தை மறுபரிசீலனை செய்து, அதற்கான கருத்துக்களை வழங்குவதற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இதுபோன்ற கருத்துக்களை Cette adresse e-mail est protégée contre les robots spammeurs. Vous devez activer le JavaScript pour la visualiser. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு "குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருமான சட்டம் தொடர்பான கருத்துக்கள்" என்ற தலைப்பில் சமர்ப்பிக்கலாம். இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான சரியான காலக்கெடு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், பெறப்பட்ட அனைத்து கருத்துக்களையும் நீதி அமைச்சிற்கு பரிசீலனைக்காக அனுப்புவதற்கு TISL உறுதியளிக்கிறது.
இந்த சட்டமூலத்தை தயாரிப்பதில் பொதுமக்கள், உள்நாட்டு நிபுணர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் போதிய நேரத்தை செலவிட்டு அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடுமாறு TISL அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. இந்த சட்டம் அரசியலமைப்பிற்கு இணங்கவும், பொதுமக்களின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கவும் உதவும். அவ்வாறு செய்வதன் மூலம், எதிர்காலத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உருவாக்குவதற்கான மதிப்புமிக்க கருவியாக இந்த சட்டம் செயல்படும்.
வெளியிடப்பட்ட POCA வரைவு: https://www.moj.gov.lk/.../Proposed-law-on-Proceeds-of...