சட்டமா அதிபரின் அறிவித்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? - FMMTU

சட்டமா அதிபரின் அறிவித்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? - FMMTU

மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சந்தேக பர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்ற சட்டமா அதிபரின் அறிவித்தல் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால நடவடிக்கைகளை நாட்டுக்கு முன்வைக்குமாறு கோரி சுதந்திர ஊடக இயக்க தொழிற்சங்கம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்கள் மீதும் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், அவர்களை விடுவிக்க முடியும் என்றும் நீதவானுக்கு அறிவிக்குமாறு சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூத்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை உட்பட பல பத்திரிகையாளர்களின் கொடூரமான கொலைகள் ஜனவரி மாதத்தில் இடம்பெற்றன. மேலும் அந்தக் குற்றங்களுக்கு நீதி கோரி ஜனவரியில் நினைவுகூரப்படும் "கறுப்பு ஜனவரி" மாதத்தில் இந்த சந்தேகநபர்கள் விடுவிப்பது பத்திரிகையாளர்கள் மற்றும் சமூகத்தினரிடையே கடுமையான கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரமான குற்றங்களுக்கு நீதி நிலைநாட்டுவதாக உறுதியளித்து முந்தைய அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்த போதிலும், அது ஒருபோதும் நடக்கவில்லை. இருப்பினும், நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில், இந்த கொடூரமான குற்றங்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துவதும் நீதி வழங்குவதும் பிரதான விடயமாக குறிப்பிடப்பட்டது.

ஜனவரி 8 ஆம் திகதி, லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட ஆண்டு நினைவு நாளில், சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் சுதந்திர ஊடக இயக்க தொழிற்சங்கம், வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்தபோது, இந்தக் குற்றங்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று எங்களிடம் வலியுறுத்தினார்.

மேலும், இலங்கையில் குற்றவாளிகளுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது சட்டப்பூர்வமாக நடைமுறையில் இல்லை என்றாலும், இதுபோனற் நடவடிக்கைகள் அத்தகைய நடைமுறைக்கு சட்டப்பூர்வ அடிப்படையை வழங்கும் என்பது எங்கள் அவதானிப்பாகும்.

இத்தகைய சூழலில், சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க வெளியிட்ட இந்த அறிவிப்பு தொடர்பில், ஜனாதிபதியும், ஒட்டுமொத்த அரசாங்கமும், தீவிர கவனம் செலுத்தி, மூத்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க உட்பட கொல்லப்பட்ட அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், தாக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கும் நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்ய தலையிடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள், நாட்டில் முன்வைக்கப்பட வேண்டும் என்று நாங்கள்  கேட்டுக்கொள்கிறோம். - என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image