முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை - அமைச்சர் மனுஷ நாணயக்கார

முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை - அமைச்சர் மனுஷ நாணயக்கார

வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறையை மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மீதானதேவையற்ற தலையீடுகளை தடுக்கவும், சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்தவும் இதன் ஊடாக வாய்ப்பு ஏற்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளதாக மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரு வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார,

நாட்டு மக்கள் வாழக்கூடிய சூழலை உருவாக்க வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் பங்களிப்புக்கு எமது கௌரவத்தை தெரிவிக்கிறோம். நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். நாட்டில் உற்பத்திப் பொருளாதாரம் உருவாக வேண்டும். முதலீடுகளுக்கு பல்வேறு தடைகள் இருக்கலாம். தொழிலாளர் சட்டங்கள் கடுமையாக உள்ளது. எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு, தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களை மாற்ற வேண்டும். நமது நாட்டின் தொழில் வளங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும். நாட்டிற்கு நல்ல சமூக பாதுகாப்பு கட்டமைப்பு அவசியம். சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கான சட்டமூலம் தயாரிக்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் முதற்கட்ட அனுமதியைப் பெற்ற பின்னர் அது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

சட்டவிரோத குடியேற்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாத வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தேவையற்ற தலையீடுகள் மற்றும் தவறுகளை களைவதற்கு வெளிநாட்டு சேவை துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் ஊடாக நிதியமைச்சு தேவையான முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதனை அமைச்சரவையில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த நடவடிக்கை மனிதக் கடத்தல்காரர்களின் செயல்பாடுகளை தடுக்க உதவும் என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image